வெள்ளி, 24 ஜனவரி, 2014

புனிதா அக்கா!

புனிதா அக்கா!

என் தந்தையின் நண்பரின் மகள்..
அழகும் அறிவும் ஒன்றாக அமைய பெற்றவள். வாரம் ஒரு முறையாவது அக்காவை பாக்கணும். ஏன்  தெரியுமா? பாதம் வரை முடிவளர்ந்த பெண்கள் நிறைய பேர் இருக்கலாம்.

நான் பார்த்த முதல் பெண், புனிதா அக்கா.  பார்க்காத இன்னொரு பெண் என் அம்மா( புகைபடத்தில் இருப்பவர்),


என் மூன்று வயதில்  உலகத்தை விட்டு பிரிந்தவர், என் அக்கா பதினோரு வயதில் என் அம்மா இறந்ததால். என் அக்காவிடம் அம்மாவை பற்றி நிறை கேள்விபட்டு இருக்கிறேன். என் கேள்விகள் சுத்தி, சுத்தி இந்த நீண்ட முடியை பற்றியே இருக்கும்..அம்மா எப்படி தலை குளிச்சு துண்டு கட்டுவார்கள்?.அப்படி இப்படி என. அம்மா அழகு என அக்கா சொல்வார்கள்.

அந்த நீண்ட முடியை கொண்ட அக்காவை பாக்கும் பொழுது என் அம்மாவை காண்பது போல் உணர்வு. அதான் வாரம் ஒரு முறையாவது புனிதா அக்காவை பார்க்கணும். அக்காவிற்கு முடியை பராமரிப்பதில் அத்தனை ஆர்வம், அவரோட உயிர் என்றே சொல்லலாம். அக்கா ஆங்கில இலக்கியம் படித்தவர். அழகா ஆங்கிலத்தில் உரையாடுவார். அவரின் தந்தை வீட்டிலே பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் பேசுவார். என் தாத்தா தமிழ் புலவர் என்பதால் எங்கள் அனைவரையும் தமிழ் வழி வகுப்பில் சேர்த்தார்கள். அதனால் அக்கா பேசுவதை வாயைபிளந்து பார்த்து கொண்டு இருப்பேன். புனித அக்கா குடும்பத்தோடு அவர்கள் சொந்த ஊருக்கு(தஞ்சை பக்கம் ஒரத்தநாடு) திருவிழாவுக்கு போகும்பொழுது, அவரை பார்த்த அவர்களது தூரத்து உறவினர் திருமணம் செய்ய பெண் கேட்டு வந்தார்கள். அக்கா மூன்றாம் வருடம் கல்லூரி படிப்பில் இருந்ததால், அவர்கள் வீட்டில் திருமணத்திர்க்கு ஆயத்தமாக இல்லை. மாப்பிள்ளை வீட்டார் பிடிவாதமாக இருந்ததால், நல்ல இடம் என புனிதா அக்காவை திருமணம் செய்து வைத்தார்கள்.

திருமணதிற்கு பின் அக்கா மறு அழைப்பிற்கு வந்த பொழுது, சில உண்மைகளை சொன்னார்கள். அதாவது அவரின் மாமியாருக்கு மகள் வழி பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக இருந்ததாகவும், அக்கா தன அழகை காட்டி அவர் பையனை மயக்கி விட்டதாகவும் வார்த்தைக்கு வார்த்தை  பேசுகிறார்கள். என் கணவரிடம் சொன்னால், கொஞ்ச நாள் போனால் சரியாகி விடும் என்கிறார்" என சொல்லி அழுதார்கள்.

அதற்க்கு பிறகு அக்காவிற்கு நிறைய சோதனைகளை கடக்க வேண்டி இருந்தது. அக்காவிடம் அவர் மாமியார் நிறைய வார்த்தைகள் விட, அவரும் திரும்ப பதிலடி  கொடுக்கும் நிலைமை. "அழகாய் இருக்கும் திமிர்" என அடிக்கடி வார்த்தைகளால் சுட்டெரித்து கொண்டு இருந்திருக்கிறார்.

அக்காவின் பிரார்த்தனை "அவர் மாமியாரின் பேத்திக்கு(கணவரின் சகோதரி மகள் ) நல்ல வரன் அமைந்து, நல்லபடி இருக்கணும்"  என்பதே.

அவர் கணவரும் அம்மா பிள்ளை என்பதால் தப்பை தட்டி கேட்க்கும் தைரியம் இல்லை.

அக்காவிற்கு அழகாய் ஆண் குழந்தை, அடுத்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் ஊர்க்கு வரும்பொழுது அவரை தவறாமல் போய் பார்ப்பேன்.

ஒரு முறை அக்காவிற்கு உடம்பு சரியில்லை ஊருக்கு வந்து இருக்கிறார்கள் என்றார்கள்.என்னவென்று கேட்டபோது எதோ சண்டையில், அக்கா, மாமியாரிடம் நியாயம் கேட்க, அன்றே அவர் தூங்கி கொண்டு இருந்த பொழுது இரவில் அவரது அந்த நீண்ட முடியை அறுத்து விட்டதாகவும் "அழகாய் இருப்பதால் தானே திமிர்" என அவரை அடக்க அவர் அந்த மாமியார் எனும் மிருகம் கையாண்ட விதமும், அதற்க்கு பிறகு  அக்காவிற்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதையும் கேட்ட என் ஒட்டு மொத்த நாடியும் அடங்கி போனது. கடவுளே, எனக்கே இப்படி என்றால் அக்காவிற்கு எப்படி இருக்கும்?

அதற்க்கு பிறகு
நான் அக்காவை பார்க்கவே இல்லை..பார்க்கும் தைரியமும் இல்லை..

அக்கா குழந்தைகளை எண்ணி அவர்களுடனே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆம் அவர் வாழ்ந்து காட்டவேண்டும்.

முடிதானே இதில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்டால் உங்களுக்கான பதிவு இது இல்லை.

எனக்கு எழும் கேள்வி,

அந்த மாமியாரின் மகன் தன் விருப்படி திருமணம் செய்ததால்
அக்காவுக்கு ஏன் இத்தனை கொடுமை?

தான் விரும்பிய மனைவி திருமணம் செய்யும் அளவு பிடிவாதமாய் இருந்த அந்த கணவன், மனைவியை கடைசிவரை சந்தோசமாக வைக்க ஏன் நினைக்கவில்லை? இந்த அளவு கொடுமையை அனுமதிப்பது ஏன்? இவர்களுக்கெல்லாம் திருமணம் எதற்கு?

தன் வீட்டுக்கு வரும் மருமகள், தன் மகள் என நினைக்கும் மாமியார்களும், மாமியாரை தன் தாய் போல் பாவிக்கும் மனதை பெண்கள் கொண்டால் என்றுமே பெண்ணினம் பேசப்படும்.

நீங்கள் திருமணம் ஆனவரோ, திருமணதிற்காக பெண் தேடுபவரோ உங்களுக்கு நான் சொல்வது இது தான்,

அவள் உங்கள் மனைவி, உங்களையே உலகம் என எண்ணி வாழ்பவள், என்றும் அவளை கலங்க வைக்காதீர்கள்.


எங்கும் சந்தோசம் நிறையட்டும்.

2 கருத்துகள்: