புதன், 29 ஜூலை, 2015

RIP - எ.பி.ஜே.அப்துல் கலாம் சார்!!



நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடுவோம் என்று உறுதி பட சொன்னவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் அப்துல்கலாம் நாட்டுமக்களுக்காக 2007ம் ஆண்டு ஆற்றிய உரையிலிருந்து 

"நாட்டில் உள்ள 25 வயதுக்குட்பட்ட 54 கோடி பேரையும் ஊக்கப்படுத்தி உத்வேகத்துடன் அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்."

அவரின் நம்பிக்கையெல்லாம்,


இளைஞர்கள் சக்தி
ஊழலற்ற நிர்வாகம்
பசுமை புரட்சி
விவசாய விஞ்ஞானிகள்


இவையெல்லாம் நாட்டை அபரிமித வளர்ச்சி அடைய செய்யும் என்பதாகும் 
ஏவுகணை ஆபத்தானதுதானே” என்ற கேள்விக்கு,
அது நம் பாதுகாப்புக்காகவே அன்றி,
ஆயுதத்தை மட்டுமல்ல,
பூக்களை அனுப்பினாலும் வீசிவரும் விஞ்ஞானமிது” என பொக்ரான் சோதனைக்கு புதிய உரை சொன்னவர் நீங்கள் !

அப்துல்கலாமிற்கு பிடித்த திருக்குறள்

அவரது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். 

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்க லாகா வரண். 

இந்த குறள்தான், தனது வாழ்விற்கு வளம் கொடுத்தது என்று அவரே ஒரு மேடையில் பேசும் போது கூறியுள்ளார். இதன் பொருள் அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பதாகும். பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது உண்மை.

எங்கள கனவு நாயகன், உங்களின் உருவத்தை, எங்கள் பிள்ளைகளின் மாறுவேட போட்டிகளில் கூட, உங்களை முன்னிறுத்தி பார்த்தோமே! அவர்கள் நன்றாக perform செய்யாத பொழுது கூட, உங்கள் உருவத்திற்காக எதாவது பரிசை தட்டி சென்றார்களே அதை அறிவீரோ!

எனது  சகோதரியின் மகன், 3 வயதில்...ஒரு மாறுவேட போட்டியில்..






என்னை பொறுத்த வரையில், இந்த பாடல் வரிகள் உங்களுக்கு மிக்க பொருந்தும்...


************************

உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவுகொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

************************
"உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யார
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு 
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாட
உலக நாயகனே... உலக நாயகனே..
கண்டங்கள் கண்டு வியக்கும்...
இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்..(( ஐ.நா - ல்உரையாற்றயவர் நீங்கள் அல்லவா!)"

"நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் 
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் 

ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று

ஆயிரம் பிறவி கொண்டாய்

உன் வாழ்வில் ஆயிரம் திரைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை" (தோல்வியுமில்லை அல்லவா?)

"உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
உள்ளத்தின் கணக்கில் நூறு அவதாரம்
முகங்களை உரித்து மனங்களை படித்து
பேரும் கொண்ட அறிவு கொண்டான் விஞ்ஞானி
விரல்களுக்குள்ளே விருச்சங்கள் தூங்கும்
உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
நெருப்பினில் கிடந்து நெடுந் தவம் சிறந்து
நீயெனும் நிலை கடந்தாய்...
இப்போது நிருபணம் ஆகிவிட்டாய்.."

****************************************************

அவரின் வாழ்கை வரலாறு, "அக்னி சிறகுகள்" "" படித்து இருக்கீர்களா?  
என் தந்தை(தாயுமானவர்)  ஒரு புத்தக பிரியர் ஆதலால் 
அந்த வரத்தை நான் பெற்றேன் (Year 2005)...
அந்த பாக்கியத்தை நான் பெற்றேன்..

அதை படித்தீர்கள் ஆனால், அந்த மாபெரும் மேதை என்கிற விருட்சத்தின் விதை என்னவென்று அறிவீர்கள்.
அந்த வேர் இந்திய மக்களின் மனதில் எவ்வாறு ஊன்றி வளரந்தது என்பதை அறீவீர்கள்!

நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை…
நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்…
இந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில்
பற்றி எறிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது…
தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும்
கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை…
இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார்.
இது இவர் கதை மட்டுமல்ல.
இந்திய அறிவியலின் மேன்மைக் கதை…
சோதனைகளின் சாதனைக் கதை…
உறுதிகொண்ட நெஞ்சின் ஓயாத உழைப்பின் கதை…
தாயகம் சாதித்துவிட்ட தன்னிறைவின் கதை…
தீர்க்க தரிசனத்தின் கதை…
ஒரு கடலோரப் படகுக்காரர் மகன்
கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை.
ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன கதை!
                                         - அக்னி சிறகுகள்

அக்னி சிறகுகள், எழுத்துருவத்தில் எங்களுக்கு அளித்த அருண் திவாரி அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்!

தனது சுயசரிதை புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டி கட்டுரை எழுதியுள்ளார்.

அவரது தாய் எவ்வளவு கஷ்டப்பட்ட சூழ்நிலையில் வளர்த்து வந்தார் என்பதையும், அந்த சூழ்நிலையில் கலாம் பட்ட கஷ்டங்களையும் கட்டுரை கூறுகிறது. 

சுயசரிதையின் ஒரு சிறு பகுதி..



"காலை 4 மணிக்கு எழுந்து படிக்க, பேப்பர் பண்டல் தூக்க, அதை வினியோகிக்க, பள்ளிவாசல் செல்ல, பள்ளிக்கூடம் செல்ல, மாலையில் பேப்பருக்கான பணம் வசூலிக்க என ஓடிக் கொண்டே இருப்பேன். ஆனாலும், இரவு 11 மணி வரை படிப்பேன். நான் சாதிப்பேன் என என் தாயார் நம்பியிருக்க வேண்டும்." 


ஒரு நாள், இரு நாள் அல்ல இந்த வாழ்க்கை..இளமைப் பருவம் முழுவதுமே...


"வயதில் எமது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு கோவிலில் கார்த்திகை மாதத்தில் முப்பது நாளும் வில்லுப்பாட்டு நடக்கும். பாட்டு பாடுபவர் ராமாயணத்தில் ராமரின் வளர்ப்பை சொல்லும் போது இந்த கருத்தை முன் வைப்பார்."

"வானில் இருந்து வரும் நீர் வாழை இலையில் படும் போது இலையின் நிறத்தில் இருக்கிறது. அதிலுருந்து மண்ணில் கீழ் விழும் போது மண்ணின் நிறத்திற்கு மாறி விடும். து போல் தான் எதுவும் தெரியாமல் பிறக்கும் குழந்தை வளர்ப்பில் தான் உருமாறுகிறது என்று அவரது கருத்து  நீண்டு செல்லும்."



பொருளுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நாம், நமது சந்ததியினருக்கு, நமது வளர்ப்பிற்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம் என்பதில் தான் அவர்களது எதிர்காலமே இருக்கிறது. என்ற செய்தியை நமக்காக விட்டு சென்று இருக்கிறார் கலாம் அவர்கள்.






கலாமின் கவிதையின் ஒரு பகுதியே அவர் தாயின் மீது கொன்ட பக்திக்கு சாட்சி..



என் மனதை உருக்கிய அந்த வரிகள்!



கடல் அலைகள், பொன் மணல், 
புனித யாத்ரிகர்களின் நம்பிக்கை, 
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு- 
இவை யெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ, 
என் அன்னையே ! 

சுவர்க்கத்தின் ஆதரவுக் கரங்களாய் 
எனக்கு நீ வாய்த்தாய். 
போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு 
வருகின்றன. 
வாழ்க்கை ஓர் அறைகூவலாய் அமைந்த 
கொந்தளிப்பான காலம் அது- 

கதிரவன் உதிப்பதற்குப் பலமணிநேரம் முன்பே 
எழுந்து நடக்க வேண்டும் வெகுதூரம் 
கோயிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம் 
பாடம் கற்கச் செல்ல வேண்டும். 
மீண்டும் அரபுப் பள்ளிக்குப் பல மைல் தூரம். 
மணல் குன்றுகள் ஏறி இறங்கி 
புகைவண்டி நிலையச் சாலைக்குச் சென்று 
நாளிதழ் கட்டு எடுத்து வந்து 
அந்தக் கோயில் நகரத்து மக்களுக்கு 
வினியோகிக்க வேண்டும். 
அப்புறம்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். 

இரவு படிக்கச் செல்லுமுன் 
மாலையில் அப்பாவுடன் வியாபாரம். 

இந்தச் சிறுவனின் வேதனைகளை யெல்லாம் 
அன்னையே, நீ, அடக்கமான வலிமையால் 
மாற்றினாய். 
எல்லாம் வல்ல ஆண்டவனிடமிருந்து மட்டுமே 
தினசரி ஐந்து முறை தொழுது 
நீ உன் பிள்ளைகளுக்கு வலிமை சேர்த்தாய். 

தேவைப்பட்டவர்களுடன் உன்னிடமிருந்த 
சிறந்தவற்றை நீ பகிர்ந்து கொண்டாய். 
நீ எப்போதும் கொடுப்பவளாகவே இருந்தாய். 
இறைவன் மீது வைத்த நம்பிக்கையையும் 
சேர்த்தே எதையும் நீ கொடுத்தாய். 

எனக்குப் பத்து வயதாக இருந்த போது 
நிகழ்ந்தது நன்றாக நினைவில் நிற்கிறது 
ஒரு பவுர்ணமி நாள் இரவு அது. 
என் உடன் பிறந்தார் பொறாமை கொள்ள 
நான் உன் மடியில் படுத்திருந்தேன். 
என் உலகம் உனக்கு மட்டுமே 
தெரியும் என் அன்னையே. 

நள்ளிரவில் நான் கண்விழித்தேன் 
என் முழங்கால் மீது உன் கண்ணீர்த்துளி பட்டு... 
உன் பிள்ளையின் வேதனை 
உனக்குத் தானே தெரியும், தாயே? 
உன் ஆதரவுக் கரங்கள் 
என் வேதனையை மென்மையாய் அகற்றின. 
உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும் 
எனக்கு வலிமை தந்தன. 
அதைக் கொண்டே நான் இந்த உலகை 
அச்சமின்றி எதிர் கொண்டேன். 

என் அன்னையே, 
நாம் மீண்டும் சந்திப்போம் 
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில். 



அந்த இறுதி நாள் வந்து விட்டதே கலாம் சார்! தாயை காண சென்று விட்டீர்களா?



நமக்கு இப்படியொரு வாழ்வியல் முன்னுதாரணத்தை, கலாம் வடிவில் கொடுத்த அந்த தாய்க்கு வணக்கங்கள்!



பக்கம் - 36 கடைசி பத்தியில் குறிப்பிட்டு இருப்பார்..

உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள்  அல்ல. 
தமக்காகவே ஏங்கிகொண்டிருக்கும் வாழ்கையின் வாரிசுகள் . அவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்கள்.  அவர்களிடம் நீங்கள் உங்கள் அன்பை வழங்கலாம். ஆனால் உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற சிந்தனை கொண்டவர்கள் அவர்கள்.

பக்கம் - 44 கடைசி பத்தியில் குறிப்பிட்டு இருப்பீர்களே! ..

"சந்தோசத்தை அனுபவிப்பதருக்கு மக்களை பக்குவ படுத்திய காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் உண்மையான பக்தர்கள் செயின்ட் ஜோசப் கல்லூரியில் எனக்கு ஆசிரியர்களாக அமைந்து இருந்தார்கள்" என என் குருவை பற்றி போகிற போக்கில் குறுப்பிட்டு இருப்பீர்களே! 

அவர் தம் சுய சரிதையிலிருந்து சில வைர வரிகள்!

ஒருவர் தன் வாழ்நாளில் தனக்குரிய இடத்தில் என்ன நிலையில் இருக்கிறாரோ, நல்லதோ கெட்டதோ எந்த நிலையை அவர் எட்டி இருந்தாலும் அது தெய்வ சங்கல்பம்.

நம்பிக்கை வைத்தால் உன் தலைவிதியை உன்னால் மாற்றி அமைக்க முடியும்.

எந்த சிக்கலான சூழ்நிலையிலும் பலனைப் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு.  ஏனென்றால் சிக்கலான எல்லா விஷயங்களிலுமே இழப்பு என்பது தவிர்க்க முடியாது.

மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன். தன்னை அறிந்தவன்தான் உண்மையான கல்விமான்.  விவேகம் தராத கல்வி பயனற்றது.

எதிர்கால வாய்ப்புகள் பற்றி யாரும் கவலைப்படவே கூடாது.  மாறாக வலுவான அடித்தளம் அமைப்பது அது பற்றிய ஆர்வம், தேர்வு செய்துள்ள துறையில் தீவிரமான நாட்டத்தை வளர்த்துக் கொள்வது என்பதுதான் மிகவும் முக்கியம்.

கடவுள் உங்களுடைய நம்பிக்கையாகவும், ஜீவனாகவும் , வழிகாட்டியாகவும் இருந்து உங்களுடைய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் ஒளி  வழங்கட்டும்.

எனக்கான வாய்ப்புக்களை நானேதான்  உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சர்வ சக்தி கொண்ட எல்லைகள்தான் உன்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.  எவ்வளவு அதிக சுமையையும் உன்னால் மட்டுமே தூக்க முடியும்.  எவ்வளவு வேகமாகவும் உன்னால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.  எவ்வளவு கடுமையாகவும் உன்னால் மட்டுமே பாடுபட முடியும். எவ்வளவு தொலைவாக இருந்தாலும் உன்னால் மட்டுமே பயணப்பட முடியும்.  

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

சந்தேகத்தை அறவே விடுத்து அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்.

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொண்டு சமாளியுங்கள்.

வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு  காணமுடியும்.

பிரச்சனைகள்தான் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன்.  எனது பணியில் இறைவனையும்  பங்குதாரராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.  அபாரமான வேலைக்கு எனக்கிருக்கும் திறமையை விட  அதிகம் தேவை என்பதை அறிந்திருந்தேன்.  எனவே கடவுளால் மட்டுமே தரக் கூடிய உதவியை நாடினேன்.

உனது எல்லா நாள்களிலும் தயாராக இரு 
எவரையும் சம உணர்வோடு சந்தி 
நீ பட்டறைக் கல்லானால் அடிதாங்கு 
நீ சுத்தியானால் அடி.

உனது பயணத்தில் நடை போடுவதற்கு இறைவன் உனக்கு ஒளி  காட்டுவான்.

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

உங்கள் முன்னே  நடமாடித் திரிவதற்காக எந்த  தேவ தூதரையும் நாங்கள் அனுப்பவில்லை. ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக நடந்து கொள்வதை வைத்துதான் உங்களை சோதிக்கிறோம். அதற்குக் கூட உங்களிடம் பொறுமை இல்லையா ?

கவலைப் படாதே, முணுமுணுக்காதே 
மனம் தளராதே, இப்போதுதான் 
வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துள்ளன 
சிறந்த  பணி  இன்னும் ஆரம்பமாகவில்லை 
சிறந்த பணி இன்னும்  முடிக்கப் படவில்லை.

காலத்தின் மணல் பரப்பில் 
உன் காலடிச் சுவடுகளைப் 
பதிக்க விரும்பினால் 
உனது கால்களை 
இழுத்து இழுத்து நடக்காதே.

உங்களுடைய  கல்வியையும் திறமையையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அறிவாற்றல்தான் நிதர்சனமான நிலையான சொத்து என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

வெற்றி அடைந்த எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் முழுமையான பொறுப்புணர்வு. 

வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்துவிட முடியாது. தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம் என்பதை எப்போதுமே  மறந்துவிடக் கூடாது.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு எதிர்காலத்திற்காக மட்டும் வாழ்வது சாரமற்ற முழுமை அடையாத ஒரு வாழ்க்கை.  சிகரத்தை எட்டுவதற்காக மலையின் பல்வேறு பகுதிகளை அனுபவிக்காமல் மலை ஏறுவதைப் போன்றது அந்த வாழ்க்கை.  இந்தப் பகுதிகளில்தான் மலையின் ஜீவன் இருக்கிறது.  சிகரத்தில் அல்ல.

மற்றவர்களின் சிந்தனையில் விளைந்த ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொண்டு நான் என்றுமே வாழ்ந்தது இல்லை. எனது வாழ்க்கையை நிர்ணயம் செய்திருப்பது   எனது இயல்புதான்.

யாருக்கு பெருமை போய்ச் சேரும் என்பதைப் பொருட்படுத்தாமல் செயல் ஆற்றுபவர்கள் மூலம்தான் மகத்தான காரியங்களை இறைவனால் நிறைவேற்ற முடியும்.

அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள். உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோஷத்தைத் துரத்தி அலையாதீர்கள். 

எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக பெறுவதற்கான இணைப்பை உங்களுக்காக கொடுத்துள்ளேன். 


பதிவிறக்கம் செய்து படித்து, அவரை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..



*************************************************************

உறக்கத்திலேயே காண்பது கனவு அல்ல. உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு.  கனவு காண்பது என்பது ஒவ்வொரு இளைஞர் வாழ்விலும் கடமையாகும். அந்த கனவை நிறைவேற்றுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். விடா முயற்சியோடு செயல்பட வேண்டும்.
தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும், என்பதே அவரது லட்சியம் 
அவரது கனவு நனவாக பாடுபடுவோம் இன்றைக்கு அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவர் கண்ட கனவை நனவாக்க இன்றைய இளைய தலைமுறையினர் இணைந்து பாடுபடவேண்டும். இதுவே நாம் அவருக்கு செலுத்தும் கடமையாகும்.


உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று இந்திய ஜனநாயகத்தின் மாண்பினை விளக்கிய மணிவிளக்கு நீங்கள். கிரேக்க தேசத்தின் நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அந்த உரையில்தான், சங்கத்தமிழினுடைய உன்னதத்தை, பழந்தமிழர் நாகரிகத்தை, 
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" -  கணியன் பூங்குன்றனார். .
என்ற தமிழரின் கோட்பாட்டை எடுத்துரைதீர்கள். தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் உலகளாவிய பெருமை சேர்த்த மகான்  நீங்கள்!
"83 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் ஒரு குழந்தை அழுது கொண்டே  பிறந்தது. அந்த குழந்தை வாழ்ந்து முடிந்து, இந்த மண்ணில் மடிந்து இப்போது இந்தியாவையே அழவைத்து விட்டுச் சென்றது."  -  வைரமுத்து 

என்னை பொறுத்த வரையில் எல்லா குழந்தைகளும் அழுதுகொண்டே பிறக்கின்றன. அவர்கள் வாழ்ந்து முடிந்து இறுதி பயணம் செல்லும் பொழுது எத்தனை இதயங்கள் கனத்து போகின்றன என்பதை பொறுத்தே, அவர்கள் வாழ்வின் சகாப்தம் அடங்கி இருக்கிறது. 

நீங்கள் நிருபித்து விட்டீர்கள். நீங்கள் இருந்த காலம் 
எங்கள் வாழ்வின் வசந்தகாலம்..
எங்கள் மாணவர்களின் பொற்காலம்...
உங்கள் வாழ்கை ஒரு சகாப்தம் என ..

நேருவின் மறைவுக்கு பின், இந்திய மக்கள் ஒரு சேர மருகி நிற்கும் உன்னத தலைவர் நீங்கள் என பத்திரிகைகள் புழலாரம் சூடுகிறது.

நேரு, மகாத்மா காலத்தில் நாங்கள் இல்லை, நாங்கள் பார்த்த நேரு, மகாத்மாவின் ஒட்டு மொத்த உருவமும் நீங்கள் அல்லவா!

உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பதே..
எங்கள் தலைமுறைக்கு நாங்கள் ஒரு சாட்சி அல்லவா!

இப்படி ஓயாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறீர்களே - எப்போது ஓய்வு எடுப்பீர்கள் ? என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் "ஓய்வு என்பது என்ன. நமக்குப் பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்து கொண்டு இருப்பதுதான். அதனால் நான் எப்போதும் ஓய்வாகத் தான் இருக்கிறேன்". எனப் பதிலளித்தீர்கள்..
ஒருமுறை சிறந்த தலைவனுக்கான அடிப்படைத் தகுதிகள் (good leadership qualities)  என்ன என்று உங்களிடம்  கேட்டபோது, பட்டியலிட்ட ஆறு அடிப்படைத் தகுதிகள்:

1. உயரிய நோக்கம் ( Great Vision) 
2. புதிய பாதையில் பயனித்தல் (Able to travel the untravelled path)
3. தோல்விகளை எதிர்கொள்ளும் திறமை (Able  to manage failures)
4. முடிவெடுக்கும்  துணிவு (Courage to take decision)
5. நேர்மையான செயல் மூலமான வெற்றி (Work with integrity and succeed with it)
6. மனிதர்களுடன் பழகும் திறன் (Able  to mix with people)  

எனப் பதிலளித்தீர்கள். எப்படி ஐயா உங்களால் மாட்டும் எல்லாம் சாத்தியமாகிறது?


ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விவேக்., ‘மறுபிறவி ஒன்று இருந்தால் எப்படி பிறக்க ஆசை?' என உங்களிடம் கேள்வி எழுப்பினார்,

அதற்கு நீங்கள், "மறுபிறவி என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி ஒன்று இருந்தால் இந்தியாவில் மீண்டும் பிறக்கவே எனக்கு ஆசை. உலகநாடுகள் அதிசயிக்கும்... ஏனென்றால் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. வருங்காலத்தின் இந்தியாவின் முன்னேற்றம் உலக நாடுகளை அதிசயிக்கும் வகையில் இருக்கும். அதுபோன்ற சமயத்தில் மீண்டும் இந்தியாவில் பிறக்க வேண்டும்எனப் பதிலளித்தீர்கள் 

உங்களின் நிறை வேற கூடிய கவாய் நீங்கள் குறிப்பிட்டது 150 கோடி மக்களின் முகத்தில் மகிழ்ச்சி. அதை பார்க்காமல் நீங்கள் எங்களை விட்டு விடுவீர்களா கலாம் சார்! 

நீங்கள் மறு பிறவி எடுத்து இருப்பீர்கள் என நம்புகிறோம்! 

மீண்டு வாருங்கள்! மீண்டும் வாருங்கள்...
உங்கள் மக்களை வழி நடத்துங்கள்...

எங்கள் மாணவர்கள்.. உங்கள் விரிவுரைக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள்! விட்ட இடத்திலிருந்து நீங்கள் அல்லவா தொடங்க வேண்டும்...கண்ணீருடன்....முடிக்கின்றேன்...